கோல சிலாங்கூர், கமாசான் தோட்டத்தில் மகா துர்க்கையம்மன் ஆலய 135 ஆம் ஆண்டு வருடாந்திர சித்திரைத் திருவிழா.
எஸ்.எஸ்.மணிமாறன்.
கோல சிலாங்கூர் மே 4. இங்கு, கோல சிலாங்கூர் ரவாங் சாலையில் உள்ள கமாசான் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகா துர்க்கையம்மன் ஆலயத்தில் 135 ஆம் ஆண்டு வருடாந்திர சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம், காலையில் பக்தர்களின் பால் குட ஊர்வலம், மதியம் மகேஸ்வரப் பூஜையுடன் அன்னதானம், மாலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை பூக்குளியில் இறங்கி நிறைவேற்றினர் என்று ஆலயத் தலைவர் நா.குருசாமி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஆலயத்தில் உள்ளூர் வெளியூர் மற்றும் தோட்டத்தை விட்டு புலம் பெயர்ந்த மக்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நடைபெற்ற பூஜை புனஸ்காரங்களில் கலந்து கொண்டனர்.

மாலையில், அம்பிகை அலங்கார தேரில் பவனியாக தாமான் கமாசான் மக்கள் குடியிருப்புப் பகுதியில் உலா வந்து அங்குள்ள பக்தர்களுக்கு அருட் கடாட்சம் அளித்தார். விழாவின் இறுதி நாளில், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றதாக குருசாமி அலை ஒளியிடம் கூறினார்.
Comments
Post a Comment