தொழிலாளர்கள் உழைப்பை மதித்து உரிய ஊதிய உயர்வு அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும். பாப்பா ராய்டுவின் மேதின வாழ்த்துரை.
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் மே 4. தொழிலாளர்களை வெறும் பணியாளர்களாக மட்டும் கருதாமல் அவர்களின் உழைப்பை மதித்து உரிய ஊதிய உயர்வும் அங்கீகாரத்தையும் வழங்கிட அதன் நிர்வாக அதிகாரிகள் நிறுவன மேலாளர்கள் சிறப்பு கௌரவிப்போடு பெருமைப்படுத்த வேண்டும்.
மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான், இன்று காலையில் இங்கு ஷா ஆலம் சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தின் அருகில் அமைந்துள்ள ஆடிட்டோரியம் வெள்ளி விழா மண்டபத்தில் நடைபெற்ற ஏழு பிரிவில் பாட்டாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் வழங்கிய மேதின வாழ்த்துரையில் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.
தொழிலாளர் நலன் கருதி மே தினத்தை பாட்டாளிகளுக்கு விடுமுறை நினைவு நாளாகப் பெற்றுத் தந்த வரலாற்று நாயகர் டாக்டர் வீ. டேவிட் அவர்களின் பெயரில், சிறந்த தொழிலாளர் விருது வழங்குவது குறித்து தாம் பரிசீலனை செய்து வருவதாக தமது வாழ்த்துரையில் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய விழாவை தலைமையேற்று வழி நடத்திய மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பாப்பா ராய்டு விருதுடன் கூடிய உதவித் தொகையும் வழங்கி அவர்களை வாழ்த்தினார். பெகெர்ஜா மடானி கெசுமா பங்சா என்ற கருப் பொருளுடன் நடை பெற்ற மேதின விருது வழங்கும் விழாவில் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாப்பா ராய்டு, ஜசெகாவின் முன்னோடியான டாக்டர் டேவிட் ஆற்றிய பணிகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அவர் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்துள்ள கால கட்டத்தில் தொழிலாளர்கள் சேவைகளை முன்னிறுத்தி அவர்களுக்காக ஒரு நாளை நினைவு கூரும் வகையில் மேதினமாக, உழைப்பாளர் தினமாக கொண்டு வந்ததைக் கருத்தில் கொண்டு, அவரது பெயரில் பாட்டாளிகளுக்கு விருது வழங்குவது மேலும் சிறப்பாக இருக்கும் என்று தாம் கருதுவதாக பாப்பா ராய்டு தெளிவு படுத்தினார்.

அழைக்கப் பட்ட பிரமுகர்கள் தொழிலாளர்கள் என திரளானோர் மேதின சிறந்த சேவையாளர்கள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.




Comments
Post a Comment